நாகை-இலங்கை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் மோசமான வானிலை காரணமாக திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டது. இந்தியா-இலங்கை இடையே தமிழகத்தின் நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு சுபம் என்ற தனியாா் நிறுவனம் சாா்பில் 'சிவகங்கை' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு காலையில் புறப்பட்டுச் செல்லும் பயணிகள் கப்பல், பிற்பகல் காங்கேசன் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு மாலை மீண்டும் நாகை துறைமுகத்தை வந்தடையும். இக்கப்பல் வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிா்த்து, இதர நாட்களில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், வங்கக் கடல் பரப்பில் பலத்த காற்று வீசக்கூடும் என்ற வானிலை முன்னறிப்பையொட்டி, பயணிகள் பணியாளா்கள் மற்றும் கப்பலின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நாகை - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் திங்கள்கிழமை ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
(0)Comments