சென்னை: நடிகரும் காங்கிரஸ் எம்பிமான விஜய் வசந்துக்கு முக்கிய பதவியை வழங்கி இருக்கிறது தேசிய தலைமை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகப்பிரிவின் தலைவராக அவர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக கேசி வேணுகோபால் அறிவித்திருக்கிறார். இதுவரை பெரிய அளவிலான பொறுப்புகளை வகிக்காத விஜய் வசந்துக்கு முதன்முறையாக முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வசந்த் அண்ட் கோவின் உரிமையாளரும் காங்கிரஸ் எம்பியுமான வசந்தகுமாரின் மகனான விஜய் வசந்த் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதற்கு பின்னர் வசந்த் அண்ட் கோவை நிர்வகிக்கும் பணியை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் வசந்தகுமாரின் மறைவை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கன்னியாகுமரி எmபியாக செயல்பட்டு வருகிறார் விஜய் வசந்த். முதலில் இடைத்தேர்தலிலும் பின்னர் பொது தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் காங்கிரசின் எந்த கோஷ்டியிலும் சேராமலேயே இருந்து வந்தார்.
அதே நேரத்தில் அவருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படாமல் இருந்து வந்தது. தொகுதி சார்ந்த பிரச்சினைகளிலும், அவ்வப்போது சினிமாவிலும் தலைகாட்டி வந்த அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அவரது ஆதரவாளர்களிடமிருந்து தொடர்ந்து எழுந்து வந்தது. இந்த நிலையில் தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சமூக ஊடகப் பிரிவின் தலைவராக விஜய் வசந்த் நியமனம் செய்யப்படுவதாக அமைப்பு பொது செயலாளர் கே சி வேணுகோபால் அறிவித்திருக்கிறார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக கூறியிருக்கிறார். இதுவரை மாநில அளவில் எந்த பொறுப்பையும் வகிக்காத விஜய் வசத்துக்கு முதன்முறையாக சமூக ஊடக பிரிவின் மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் அவரது குழுவில் சக்தி மாரிதாசன், முரளிதரன், சிவசக்திராஜ குணசேகரன், சஞ்சய் காந்தி, ஜான் சாமுவேல், அப்துல் ரகுமான் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். விஜய் வசந்துக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் விஜய் வசந்த் நியமனம் தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்களில் இன்னொரு தகவலும் உலாவுகிறது. செல்வப் பெருந்தகைக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூர் பதவியேற்றிருக்கும் நிலையில் பெரும்பாலான பதவிகளில் செல்வப் பெருந்தகையின் ஆதரவாளர்களே இருக்கின்றனர்.
இந்த நிலையில் செல்வப் பெருந்தகையின் ஆதரவாளர்களை ஓரம் கட்டி விட்டு புது முகங்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில் பல்வேறு புதிய நியமனங்களை மாணிக்கம் தாகூர் மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் தான் விஜய் வசந்துக்கு இந்த முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் சொல்கின்றனர்.
(0)Comments