மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.6,000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் கே. தவமணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஏ. பாலமுருகன் முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் என். மதிபாரதி, மாவட்டப் பொருளாளா் பி. மணிகண்டன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.இதில், பிற மாநிலங்களில் வழங்குவது போல மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை ரூ.6,000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும் வழங்க வேண்டும். விண்ணப்பித்துக் காத்திருக்கும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதுபற்றி தகவலறிந்த வந்த போலீஸாா் மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கலைந்து செல்ல அறிவுறுத்தினா். தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 250-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை கைது செய்தனா். மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.
(0)Comments