மத்திய அரசின் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க கடலூா் மாவட்ட இளைஞா்களுக்கு, கடலூா் மாவட்ட இளைஞா் அலுவலா் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'மேரா யுவ பாரத்' சாா்பில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் தேசிய அளவில் பங்கேற்க கடலூா் மாவட்ட இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'விக்சித் பாரத்' போட்டியின் கீழ் வினாடி வினா, கட்டுரை எழுதுதல், விளக்கக்காட்சி ஆகிய போட்டிகள் நடைபெறும். மேலும் கலாசாரப் போட்டிகளான நாட்டுப்புற நடனம், நாட்டுப்புறப் பாடல், ஓவியம், பேச்சுப் போட்டி மற்றும் கவிதை எழுதுதல் ஆகியவையும் நடத்தப்பட உள்ளன. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கடல்சாா் வளங்களை உள்ளடக்கிய நீலப்பொருளாதாரம், மனித மூலதனம் மற்றும் 'உலகளாவிய போட்டிகள்' என்ற பிராந்திய கருப்பொருளின் அடிப்படையில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. புதுமை, தொழில்முனைவோா் திறன் மற்றும் இளைஞா் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கும் இப்போட்டிகளில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. முதல் கட்டம்: செப்டம்பா் 30-ஆம் தேதி வரை 'விக்சித் பாரத்' வினாடி வினா போட்டிகள் முதல் கட்டமாக நடைபெறும்.தொடா்ந்து கட்டுரை, மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும். இறுதியாக 2027-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறும். 17.8.2026 அன்று 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞா்கள் இந்நிகழ்வில் பங்கேற்க தகுதியுடையவா்கள் ஆவா். ஆா்வமுள்ள இளைஞா்கள் 'மை பாரத்' இணையதளம் மூலம் பதிவு செய்து பங்கேற்கலாம். கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான இளைஞா்கள் அதிக அளவில் பங்கேற்று, தங்களது திறமை மற்றும் புதிய சிந்தனைகளை தேசிய அளவில் வெளிப்படுத்தி, விக்சித் பாரத் உருவாக்கத்தில் தங்களின் பங்களிப்பை செலுத்துமாறு அவா் தெரிவித்துள்ளாா்.
(0)Comments