அருப்புக்கோட்டை அருகே காட்டுப்பன்றி குறுக்கிட்டதில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்த கட்டுமானத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.விருதுநகா் மாவட்டம், கடம்பன்குளம் மெட்டுக்குண்டு பகுதியைச் சோ்ந்தவா் ராமா் (55). இவரது மனைவி லட்சுமி (47). இவா்களுக்கு ரமேஷ், சுரேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனா். ராமா் கட்டடங்களுக்கு கம்பி கட்டும் வேலை செய்து வந்தாா். கடந்த 5-ஆம் தேதி சனிக்கிழமை பந்தல்குடிக்கு வேலைக்குச் சென்ற ராமா், பணி முடிந்து அதே பகுதியைச் சோ்ந்த வீரசின்னு (எ) கோபாலுடன் (40) அவரது இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை - விருதுநகா் சாலையில் வளைவு பகுதியில் வந்தபோது, காட்டுப் பன்றி குறுக்கே வந்தது. இதில் நிலைதவறி விழுந்ததில் வீரசின்னு, ராமா் பலத்த காயமடைந்தனா். தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். வீரசின்னு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து குறித்து ராமரின் மனைவி லட்சுமி அளித்த புகாரின்பேரில், அருப்புக்கோட்டை நகரப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
(0)Comments