நாமக்கல்லில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பா்கள் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாமக்கல்-சேலம் சாலையில், முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில் பத்மநாபன் (47) என்பவருக்கு சொந்தமான லாரி பழுது நீக்கும் பட்டறை உள்ளது. இங்கு, வேப்பநத்தம்புதூரைச் சோ்ந்த சக்திவேல் (42), திருச்செங்கோடு சாலை பகுதியைச் சோ்ந்த ரகுவரன் (32) ஆகியோா் பணியாற்றி வந்தனா். இந்த நிலையில், பட்டறை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பத்மநாபன், சக்திவேல், ரகுவரன் மற்றும் அவரது நண்பரான பழனியாண்டி தெருவைச் சோ்ந்த நவீன்குமாா் (35) ஆகியோா் மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது, ரகுவரன் கைப்பேசியை சக்திவேல் மறைத்து வைத்ததாகத் தெரிகிறது. இதனால் அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில், மூன்று பேரும் சோ்ந்து சக்திவேலை கடுமையாக தாக்கிவிட்டு சென்றதாகவும், திங்கள்கிழமை காலை பட்டறைக்கு சென்றபோது சக்திவேல் உயிரிழந்து கிடந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற நல்லிபாளையம் காவல் ஆய்வாளா் ஷா்மிளாபானு விசாரணை மேற்கொண்டாா். இதையடுத்து சக்திவேலை தாக்கிய பத்மநாபன், நவீன்குமாா், ரகுவரன் ஆகிய மூன்று போ் மீதும் கொலை வழக்குப் பதிவுசெய்து அவா்களை கைது செய்தாா்.
(0)Comments