- நமது நிருபர் -
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா, புறக்கணிப்பதா என, தி.மு.க., குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
வரும் அக்.,6ல் நடக்கும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், நாளை தொடங்க உள்ளது.
இந்நிலையில், இடைத்தேர்தலை அணுகுவது குறித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்துள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
இடைத்தேர்தல் நடக்கும் மதுராந்தகம், தாராபுரத்தில், அ.தி.மு.க., பலமாக உள்ளது. 2021 சட்டசபை தேர்தலில், சென்னை மண்டலத்தில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெற்றபோதும், மதுராந்தகத்தில் தோற்றது. அதேபோல், தாராபுரத்தில் வெறும் 1,700 ஓட்டு வித்தியாசத்தில் தான் தி.மு.க., வென்றது.
2026 சட்டசபை தேர்தலிலும், மதுராந்தகத்தில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., தாராபுரத்தையும் கைப்பற்றியது. எனவே, இவ்விரு தொகுதிகளிலும் தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு குறைவுதான்.
பதவியை ராஜினாமா செய்தோருக்கே, த.வெ.க., மீண்டும் 'சீட்' கொடுத்தால் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட கூடும். இந்நிலையில், தி.மு.க.,வும் களமிறங்கினால், மும்முனை போட்டி உருவாகி, த.வெ.க.,வுக்கே சாதகமாகும். இடைத்தேர்தலில் தி.மு.க., தோல்வி அடைந்தால், அக்கட்சியின் உள்ளாட்சி தேர்தல் கணக்குகளில், பலத்த அடி விழும்.
எனவே, இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாமல் விலகி, அ.தி.மு.க., வெற்றி பெற திரைமறைவில் உதவினால், த.வெ.க.,வை இரு தொகுதிகளிலும் வீழ்த்தி, விஜயின் பிம்பத்தை உடைக்கலாம். அதே நேரத்தில், தேர்தல் களத்தை தவிர்த்தால், த.வெ.க.,வுக்கு பயந்து பின்வாங்கியதாகவும் ஆகி விடும்.
இப்படி பலவிதமாக எழும் கேள்விகள் தலைமையை சுழன்றடிக்கின்றன. இறுதி முடிவுக்கான ஆலோசனைகள் தொடர்கின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனிடையே, சென்னை அறிவாலயத்தில் பேட்டியளித்த ஸ்டாலின், ''சட்டசபை மாண்போடு நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இடைத்தேர்தலில் தி.மு.க., நிலைப்பாடு குறித்து, விரைவில் அறிவிப்போம்,'' என்றார்.
(0)Comments