ஐதராபாத்: தெலங்கானா பேரவை மழைக்கால கூட்டத்தொடருக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த பிஆர்எஸ் உறுப்பினர்களை காவல் துறையினர் தடுத்ததால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
தெலங்கானா சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. முதல் நாளான நேற்று அவைக்கு வந்த பிஆர்எஸ் கட்சி உறுப்பினர்கள் கருப்பு நிற டி சர்ட் அணிந்து கொண்டு வந்தனர். அதில், 'காங்கிரஸ் அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டது' என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் அவைக்கு வந்த பிஆர்எஸ் உறுப்பினர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது பிஆர்எஸ் கட்சி உறுப்பினர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக பிஆர்எஸ் தலைவர் கே.டி.ராம ராவ் மற்றும் சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது. இதை கண்டித்து பிஆர்எஸ் எம்எல்ஏ ஹரிஷ் ராவ் மற்றும் பிறர் தங்கள் டி சர்ட்களை கழற்றி விட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களை காவல் துறையினர் வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.
இதனிடையே, பேரவை தொடங்கியபோது, பதிவு சட்டம் பிரிவு 22 ஏ வின்கீழ், பதிவு மற்றும் பிற பரிவர்த்தனைகளை தடுக்கும் வகையிலான தடை செய்யப்பட்டவை பட்டியலில் பொதுமக்களின் தனியார் நிலங்கள் சேர்க்கப்பட்டது தொடர்பாக உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என பாஜ உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். ஆனால், அதற்கு மறுத்த பேரவை சபாநாயகர் கத்தம் பிரசாத் குமார், அவையை நடத்த ஒத்துழைக்குமாறு கேட்டு கொண்டார். ஆனால் அதை ஏற்க மறுத்த பாஜ உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
(0)Comments