தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சென்னையில் இன்று (08.09.2026) நேரில் சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, இந்தத் தொகுதிகளில் தங்களது வேட்பாளர்களைக் களம் இறக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முடிவு செய்துள்ள நிலையில், பாஜகவிடம் அதிகாரப்பூர்வமாக ஆதரவு கோருவதற்காகவே இந்த முக்கியச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
அதோடு தொகுதி நிலவரங்கள் மற்றும் தேர்தல் உத்திகள் குறித்து இரு தரப்பினரும் விரிவாக ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழலில், அதிமுக நிர்வாகிகள் பாஜக தலைவரைச் சந்தித்து ஆதரவு கோரியிருக்கும் இந்த நகர்வு, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதை உணர்த்துவதுடன், வரும் நாட்களில் தேர்தல் கூட்டணிக் கணக்குகளில் மிக முக்கியத் திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(0)Comments