- நமது நிருபர் -
'உள்ளாட்சி தேர்தலுக்குள் திமுகவின் மொத்த செல்வாக்கையும் உடைக்க வேண்டும்' என இலக்கு நிர்ணயித்து, தவெக செயல்படத் துவங்கியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பின், திமுக எதிர்ப்பை மட்டுமே முதல்வர் விஜய் பிரதானப்படுத்தி வருகிறார். அதிமுகவின் 'தீயசக்தி திமுக' என்ற கோஷத்தை தனதாக்கி, திமுகமீது ஊழல் குற்றச்சாட்டுகள் அடுக்கி வருகிறார். அடுத்த மூன்று மாதங்களுக்கு, திமுக மீதான தாக்குதலை வேகப்படுத்த, தவெக திட்டமிட்டுள்ளது.
தவெக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தவெகவில் தற்போது, அரசு, கட்சி நிர்வாகிகள், சமூக வலைதள நிர்வாகிகள் என, மூன்று கட்டமைப்புகள் உள்ளன. மூன்று தரப்பின் முக்கியமானவர்களுடன், உயர்மட்ட ஆலோசனை நடந்தது. அதில், அடுத்த மூன்று மாதங்களுக்கு திமுகவை கடுமையாக தாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
பெண்களை இழிவுபடுத்தியதாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை கைது செய்த போதே, இது தொடங்கி விட்டது. அது, தவெகவுக்கு எதிராக திரும்பியதால், சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
திமுகவின் பழைய விஷயங்களை தோண்டி எடுத்து பேசி, செல்வாக்கை உடைப்பது மற்றும் திமுக கட்டமைப்பையும், அவர்களின் பலமாக மக்களும், திமுகவினரும் நம்பும் விஷயங்களை குறி வைத்து தாக்குவது ஆகியவை அந்த மாற்றங்கள்.
அதன் தொடக்கமாகத்தான், 'சர்க்காரியா கமிஷன்' குறித்து, சட்டசபையில் முதல்வர் விஜய் பேசினார். அடுத்து, திமுக தலைவர் ஸ்டாலின், 'மிசா' கைதை விமர்சித்து, அமைச்சர் நிர்மல்குமார் பேசி உள்ளார்.
மேலும், திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது, ஊழல் வழக்குகளை பதிவு செய்யும் பணியை, மூன்று அமைச்சர்கள் தலைமையில், அரசு நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.
திமுக பத்திரிகையான 'முரசொலி' அலுவலகம் அமைந்துள்ள, பஞ்சமி நில விவகாரம் உட்பட, பல்வேறு கால கட்டத்தில் திமுகவை ஆட்டம் காண வைத்த விஷயங்களை, பொதுவெளிக்கு கொண்டு வர உள்ளோம்.
திமுக மீதான விஷயத்தை மக்களிடம் கொண்டு செல்ல, விவாதங்கள், கட்சி மேடைகள், சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் தொடர்ந்து பேசுமாறு மூன்று தரப்பினருக்கும் பணிகள் பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளன.
உள்ளாட்சி தேர்தல் வரை, தினமும் விதம் விதமாக தாக்குதலை தொடுத்தால், தாக்கு பிடிக்க முடியாமல் திணறி, தேர்தலில் கவனம் செலுத்த முடியாமல், மேலும் பல தவறுகளை திமுக செய்ய வேண்டும் என்பதே தவெகவின் நோக்கம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
(0)Comments